Thursday 19 June 2014

உயிர்


உயிர்

'கடவுள்' - இதைப் பற்றிய உங்கள் கருத்து... என் நண்பர் கேட்ட கேள்வி இது. அவர் எனக்கு தெரிந்த நாளில் இருந்தே நாத்திகவாதிதான். இந்த ஒற்றை வார்த்தைக்கு எப்படி பதில் சொல்லி நிறைவு செய்துவிட முடியும். இயற்கை என்பதே கடவுள் என்று சொல்லி அந்த கணத்தை நிரப்ப முடியாமல் நிரப்பிவிட்டேன். நிரப்பிவிட்டதாக நம்பினேன் என்பதே சரியாக இருக்கும். ஆனால் இந்த பதிலில் எனக்கே உடன்பாடில்லைதான். இயற்கை மட்டும்தான் கடவுளா என்கிற கேள்வி நாள் முழுவதும் என்னை தொந்தரவு செய்தபடியே தொடர்ந்தது. மாலை எனது வீட்டின் மேல்தளத்தில் காற்று மிக மென்மையாக உடல் தழுவிக்கொண்டு இருந்தது, இப்போது இயற்கையை சென்னையின் வளர்ச்சி மங்கிப்போக செய்திருந்தாலும் என்னுடைய வீடு சென்னையின் ஒதுக்குபுறத்திலிருப்பது. அதனால் இயற்கை இன்னும்கூட சின்னச் சின்னதாக உயிர்ப்போடு இருந்தது அங்கு. "கடவுள்" என்கிற அந்தக் கேள்வியையே மீண்டும் மனம் கேட்க ஆரம்பித்தது. அப்போது என்னுடைய அந்த நினைவும் வெளிப்பட்டது.
ஆமாம்...  
வயது முப்பத்து ஐந்து இருந்திருக்க வேண்டும் அந்த மனிதருக்கு. ஒடிசலான உடல் என்று சொல்ல முடியாது ஆனால் மிகவும் தேற்றலான உடலும் இல்லை. நான் கிடத்தப்பட்ட படுக்கைக்கு பக்கத்தில்தான் அவருடைய படுக்கை. பார்ப்பதற்கு சிறிய உடல்நலக்கோளாறால் ஓய்வில் இருக்கும் நபரைப்போல் தோற்றமளித்தார் அவர். ஆனால் அப்போது எனக்கு தெரியாது அந்த பயங்கரம் இவருக்கு நடக்கவிருக்கிறது என்பது.

கடந்த சில மாதங்களில் ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த என்னுடைய உடல் இந்த இருபத்து நான்கு வயதிலேயே இன்னும் சில தினங்கள் அல்லது நாழிகைகள் மட்டுமே என்கிற அளவிற்கு மிக மோசமடைந்ததை தொடர்ந்து இப்போது மாநகரின் பெருவெளியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளேன். உடலுக்குள் இன்னுமும் உயிர் இருக்கிறது என்பதை உணர்வதே சிரமமான வேலையாக இருந்தது என் தாய்க்கு. நடுத்தர மக்களுக்கு பணக்கார நோய்கள் வந்துவிட்டால் அவர்களின் நிலை இதுவாகத்தான் இருக்க முடியும். நல்ல மனிதர்களை சம்பாதிக்க முடிந்த என்னால் என் இதயத்தை சரிசெய்ய பொருளை சம்பாதிக்க முடியாமல் போயிருந்தது அப்போது. அதன் விளைவு இந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளேன்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து மருத்துவமனைக்கு படையெடுத்த பின்பு அன்று நான் அவசரமாக அட்மிட் ஆக வேண்டும் என்று டாக்டர் வலியுருத்தினார். அம்மாவும் அண்ணனும் என்னோடு. டாக்டர் சொல்லிவிட்டாலும் மருத்துவமனை படுக்கைகள் இடம் தரவில்லை. அடுத்த இரண்டு நாட்களாக தரையில் கிடத்தப்பட்டு கிடந்தேன். காலையில்தான் அந்த பெட் காலியாகி இருப்பதை கண்ட என்னுடைய அண்ணன் அங்குள்ள நர்ஸ்களிடம் கேட்டுகொண்ட பிறகு (சண்டை போட்ட பிறகு) எனக்கு அந்த பெட் கொடுக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரத்திலெல்லாம் அம்மாவிற்கு அந்த உண்மை தெரியவந்தது. அந்த பெட்டிலிருந்த நபர் சில மணி நேரத்திற்கு முன்புதான் உயிரிழந்தார் என்று. அவர்கள் பிணத்தை எடுத்து சென்ற சில விநாடிகளில் தண்ணீரால் கழுவக்கூட இல்லாத அந்த பெட்டில் இப்போது என் உடல் கிடத்தி வைக்கப்பட்டு கிடந்தது. அரை உயிரில் நிகழும் நிஜங்களெல்லாம் ஒரு கனவுகள்போல எனக்கு தெரிகிறது. டாக்டர்கள் (அதாவது டாக்டருக்கு பயின்றவர்கள்) வந்து பார்ப்பதும் செல்வதுமாக அடுத்த இரண்டு நாட்கள் நீள்கிறது.

மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளை விட நோயாளிகளுக்கு துணையாக இருப்பவர்கள் நிலைமை வெகு மோசமானது. அவர்களின் ஒரே ஆறுதல் பக்கத்து பெட் நோயாளிகள் பற்றிய தகவல் பரிமாற்றங்களில்தான். தொடர்ந்தே இதயவலியின் உச்சத்தில் இருந்த எனக்கு இன்னும் சில மணி நேரங்களில் உயிர் பிரியும் என்கிற நிலைமை நீடித்திருந்தது. நானும்கூட எதிர்பார்த்திருந்தது அதைத்தான். வலியை பொருக்க முடியாத எனக்கு இறப்பு என்கிற ஆறுதல் தேவையான ஒன்றாக தோன்றியது.

அந்த மனிதர் என் அளவிற்கு உடல் மோசமான நிலையில் இல்லையென்றாலும் அவரும் இதய நோயின் தொடக்க கால நோயாளிதான் என்பது தெரியவந்தது. நன்றாக அவர் தன் மனைவியிடம் பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் நான்தான் என் அம்மாவை அதிகபட்சமான சிரமத்திற்கு உட்படுத்தி கொண்டிருந்தேன். வலியின் வேதனையில் உட்கார வைக்க சொல்வதும் அடுத்த சில கணங்களிலேயே படுக்க வைக்க சொல்வதுமாக இம்சித்துகொண்டிருந்தேன். இரவு மொத்தமும் இப்படித்தான் கழிந்தது. காலை ஐந்து மணி இருந்திருக்க வேண்டும். நேற்றைய பொழுது போலவே எனக்கு காபியை ஊட்டிக் கொண்டு இருந்தார் என் அம்மா. எப்போதும்போல இந்த தேநீரும் வாந்திதானே வரப்போகிறது என்கிற பயத்தில் பருகிய எனக்கு, அடுத்த விநாடியில் குடித்த கொஞ்சம் காபிகூட வாந்தியாக வெளிப்பட்டது. இதற்கு மேலும் உணவை எடுத்துகொள்கிற சக்தி எனக்கு இல்லை. இரவு நன்றாக உணவு எடுத்துகொண்ட பக்கத்து பெட் நபர் உறக்கம் கலைந்த நேரம் அப்போது. எழுந்தது முதல் இன்று ஏனோ தெரியவில்லை. அதிக சிரமத்திற்கு உட்பட்டார்.

வலி தாங்க முடியாத அதீத வலி அவரிடமிருந்து வெளிப்பட்டுகொண்டே இருந்தது. சற்றும் நான் இதனையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. நேற்றுவரை சில நேரங்களில் அவர் எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் காலை முதலே அவரின் சிரமம் என்னை மிகவும் வருத்தியது. அடுத்த சில நேரங்களில் ஏழு மணிக்கெல்லாம் பொதுவாகவே எந்த மருத்துவரும் இருப்பது கிடையாது. அங்கிருந்த பயிற்சியாளர்கள் மட்டும் வரவழைக்கப்பட்டு இருந்தார்கள். அவருடைய பெருத்த அலறல் ஏதோ நடக்கப் போகிறது என்கிற பயத்தை எனக்குள்ளாக அறிவித்தது. டாக்டர்கள் வந்த சில விநாடிகளில் அவர் துணியாலான இழுவை அறை கொண்டு அடைக்கப்பட்டார். இப்போது அவரின் அலறல் மிக அதிகமாக வெளிப்பட்டது. அடுத்தடுத்த விநாடிகளுக்குப் பிறகு அவரிடமிருந்து எந்த சலனமும் இல்லை. ஏதோ ஒன்று முடிவுக்கு வந்துவிட்டதுபோல தோன்றியது. வந்திருந்த நாக்டர்கள் அவருடைய இதயப் பகுதிக்கு மிக வேகமாக அழுத்தம் தர தொடங்கியிருந்தார்கள். ஆனால் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. திரைப்படங்களில் காண்பிப்பதுபோல எந்த இயற்கையை மீறிய செயலும் நடந்தேறவேயில்லை. ஆனால் நான் எதிர்ப்பார்த்தது அந்த இயற்கைக்கு மீறிய செயலைத்தான்.

என்னிலிருந்தது ஒப்பிட்டால் அவர் ஆரோக்கியத்தோடுதான் இருந்தார். ஆனால் இறைவன் கணக்கு அவரை அழைப்பதுபோல. அவருடைய ஆத்மாவிற்கு ஓய்வு கிடைத்திருந்தது. அடுத்த சில மணி நேரங்களில் நான் வேறு ஒரு பெட்டிற்கு இடம் மாற்றப்பட்டேன். இப்போது அவர் உடலைச் சுமந்த படுக்கை அடுத்த உடலை சுமக்க தயாராகிக் கொண்டிருந்தது. என்னைப் போல யாரோ ஒருவர் அந்த படுக்கைக்கு அனுமதிக்கபட்டு கிடந்தார். அடுத்தடுத்த நாட்களில் மெல்ல உடல் நலம் தேறியது எனக்கு. ஆனால் அவரைப் போன்ற பல பேரின் கண்ணீர் கதைகளை சுமந்துகொண்டுள்ள என் இதயம் இப்போது இயற்கை என்பது மட்டுமே கடவுள் என்பதை பலமாக நம்பியது.

Monday 24 September 2012

எனக்குள் யாரோ?


தின்வயதுக்கான வளர்ச்சிகளோடுதான் இருந்தான் வருண். ஆனாலும் மனதளவில் சின்னக் குழந்தைகளை ஒத்திருந்தது அவனுடைய பேச்சுத்தோரணையும் நடைமுறை யதார்த்தங்களும்... இதுவரையிலான அவனுடைய வாழ்வின் அசைவுகளை அந்த 18 வயது வருண் ஒருநாளும் அசைபோட்டவனாய் தெரியவில்லை. காரணம் தன்னை அவன் எப்போதும் ஒரு குழந்தையாகவே மனதுக்குள் வளர்த்துகொண்டான். இந்த பதின்வயது என்பது எல்லா இளசுகளுக்குமே ஒரு நெருக்கடியை தந்துவிட்டுதானே போகிறது. இந்த நெருக்கடியைத்தான் இப்போது வருணும் சந்திக்கிறான் அவனுக்குமேகூட தெரியாமல்...

அவனின் குடும்பம் என்றுமே ஒரு குழந்தையாகவே பார்த்துகொண்டுதான் இருந்தது. இன்றும் அதுவே நீடிக்கிறதுகூட. ஆனால் இந்த வயதிற்கான மாற்றங்கள் மெல்ல மெல்ல மேலெழ துவங்கியிருந்தது வருணுக்கு. ஆமாம் வீட்டுப் பொழுதுகளைவிட அதிக நேரங்கள் இப்போதெல்லாம் நண்பர்களோடுதான் பொழுதுகள் கழிகின்றன வருணுக்கு. எல்லாம் அவனின் வயதொத்த நண்பர்கள் வட்டம்தான். அவனுடைய நட்பு வட்டமே சற்று வித்தியாசமானது. ஆம் எல்லாருக்குமான நண்பர்களை காட்டிலும் இவனுக்கான நண்பர்கள் சற்று அதிகம்கூட. காரணம் வருணின் குறும்புத்தனமாக பேச்சுக்களும் சிறுபிள்ளை போன்ற விளையாட்டுச் செயல்களும். ஆனால் அத்தனை நண்பர்களிலும் வருணுக்கு மிகவும் பிடித்தவர்களாக ஒருசிலர் மட்டுமே இருந்தனர்.

அவர்கள் சொல்வதை அச்சுபிழறாமல் செய்து முடிப்பவனாய் மாறி இருந்தான் வருண் இப்போது. காரணம் இந்த பதின்வயது எதிர்பார்க்கும் பாசமும் அன்பும் வீட்டிற்கு வெளியிலும் தனக்கு மட்டும்தான் கிடைக்கிறது என்கிற வருணின் எண்ண அலைகள். இதுவரை இருந்த அவனுடைய செயல்களில் மெல்ல மெல்ல அவனின் நண்பர்களின் தலைதுக்கல்கள் ஆரம்பமானது இப்போது. வருணின் சில குணாதியங்களை மாற்றிக்கொள்ளுமாறு நண்பர்களின் ஒருவன் சொல்ல மறுப்பே தெரிவிக்காமல் மாறத் தொடங்கினான் வருண். காரணம் தனக்காகவே அவன் யோசிக்கிறான். தனக்காகவே உறங்குகிறான் விழிக்கிறான் என்கிற வருணின் சிந்தனை. இப்போது மற்றொரு நண்பனின் ஆசைக்காக இன்னுமொரு மாற்றம் தெரியத் தொடங்கியது வருணின் உடையில்.

அன்று வருணின் பிரியமான தோழி சொன்னாள், வருண் உனக்கு சில மாற்றங்கள் செய்யப்பட்டால் சும்மா மாடல் ஹீரோ மாதிரி இருப்படா என்று. உடனடியாக மாறிவிட்டான் வருண். அதிசயம்... அன்று முழுவதும் அவன்வீட்டு ஆளுயரக் கண்ணாடியில்தான் பொழுதைக் கழித்தான்.

நாட்கள் நகர்ந்தன... அவனுக்கான மாற்றங்கள் மெல்ல மெல்ல அவனே அறியாத ஒரு அழுத்தத்தை தர ஆரம்பித்திருந்தன... இப்போது அவன் தன்னுடைய குழந்தைதனத்தை தொலைத்திருந்ததை உற்று கவனிக்க தொடங்கியிருந்தான். மெல்ல சிந்திக்கவும் தொடங்கினான் நான் ஏன் இத்தனை மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டேன் என்று. ஆனால் இப்போது காலம் தாண்டிய யோசனையாகபட்டது அவனுடைய மனதுக்கு. இருந்தாலும் தன்னுடைய குழந்தைதனமாக சிரிப்பும் சிறுபிள்ளையான விளையாட்டும் தனக்கே தெரியாமல் தொலைந்திருந்ததை அவனால் கவனிக்க முடிந்தது.


மெல்ல மனதோடு அவனுக்கான போராட்டம் தொடங்கி இருந்தது இப்போது. அவனுக்கு பிடித்தமான அவனுடைய சிறுபிள்ளைத் தோரணையிலிருந்து தாண்டி வந்துவிட்டது போன்ற அழுத்தம் அவனுக்குள். இதனை மிக தாமதமாகவே அவனுக்கு தெரிந்திருந்தாலும் இந்த மாற்றங்களை அவனால் இப்போது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இருக்கிறதோ என்கிற எண்ணம் தோன்ற ஒரு டாக்டரையும் பார்த்தான் வருண். அவரின் ஆலோசனைகள் அவனுக்கு அப்போது தேவைப்பட்டதுதான்.

காலங்கள் மாறின... மெதுவாக உருண்டன பொழுதுகள். அடைபட்டவனாக உணர்ந்த வருணுக்கு இப்போது பரவாயில்லை என்கிற எண்ணம் மேலெழுந்தது. மீண்டும் தன்னுடைய குழந்தைதனமாக விளையாட்டுக்களும் பேச்சு மொழிகளும் அவனுக்குள் நிறைவதை ரசிக்கத் தொடங்கினான். நமக்கான மாற்றங்களை இந்த உலகம் தீர்மானிக்கின்றன... ஆனால் நம்மை நாமாகவே பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ள முயல்வதில்லை. இப்போது தன்னை எந்த மாற்றத்திற்கும் உட்படுத்தாத நட்புக்களே போதும் என்கிற முடிவுக்கு வந்தவனான் வருண் இப்போது.

இந்த புதிய காலைப்பொழுது வருணின் கண்ணில்பட்டது இந்த வாசகங்கள்... யாருக்காகவும் உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள்... மாற்றிக்கொள்ள ஆரம்பித்தால் உலகின் ஒவ்வொருவருக்காவும் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கலாம் என்று இருந்தது அந்த சுவற்று வாசகங்கள்.

Monday 19 September 2011



பணம் தேவைதான்..!

Wednesday 24 August 2011

கலைகள் சொல்லும் கதைகள்

கலைகள் சொல்லும் கதைகள்

இரவுக்குதான் எத்தனையெத்தனை சக்திகள்... மனிதர்களை நிஜ உலகிலிருந்து நியமங்களும் எல்லைகளும் வரையறுக்காத உலகத்துக்கு இழுத்து சென்றுவிடுகிறது. ஆனால் அந்த ராப்பொழுதுதான் செல்வ கணபதிக்கு சக மனிதர்களிடமிருந்து தன்னை பிரித்துகொள்ளும் நிகழ்வாகி போயிருந்தது. பிறந்தது முதல் இன்றுவரை தன் வாழ்க்கையை செலுத்தும் சக்தியாக அவர் கற்ற தெருக்கூத்து கலையைத்தான் நினைத்திருந்தார்.


கூத்துக்களில் இவரின் கர்ணனின் வேடமும், கர்ண மகாராஜனை உள்வாங்கி வெளிப்படுத்தும் திறனும் இவரை ஊரின் பலராலும் கர்ணன் என்றே அழைக்கும்வண்ணம் செய்திருந்தது நிதர்சனமான உண்மைதான்.

இந்த ராப்பொழுதும் அவருக்கு கர்ணனாக அவதாரம் எடுக்கும் நேரம் வாய்த்திருந்தது. இரவு பத்தரையிலிருந்து பதினொன்றை நோக்கி நகர்ந்துகொண்டிந்தது. தெருக்கூத்தும் ஆரம்பமாகியிருந்தது. செல்வமும் கர்ணணுக்கான வேடத்தை அணிந்தபடி இருந்தபோது, அவர் மகன் அருணை பற்றியும் எண்ணாமல் இருக்க முடியவில்லை. தன் மகனை எப்படியும் ஓர் சிறந்த மனிதனாக்கி விடும் முயற்சியில், கடந்த 20 ஆண்டுகளையும் அவனுக்காவே செலவிட்டிருந்தார். இந்த வருடம் காலேஜ் முடிந்தால் அருண் ஒரு சிறந்த என்ஜீனியர். அருண் காலேஜ்  போனபின் அவனை சரிவர அவரால் காணகூட முடியாமல் போனது. தான் காணாத வேற்றுலகை தன் மகன் காண வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தார் செல்வம்.

அருண் தன் தந்தையை கர்ணனான பார்த்தே பிரமித்துபோயிருந்தான். அவரது தெருக்கூத்து நாடகங்களை ஒருநாளும் பார்க்காமல் உறங்குபவன் அல்ல. ஆனால் இன்றோ பார்க்கும் வாய்ப்பை கைவிட வேண்டி இருந்தது அவன் படிப்புக்காக. அருணுக்கான காலேஜ் பட்டம் கனவுகளை மெய்ப்பித்து விடவேண்டும் என்பதில்தான், தன் அப்பா அயராது இந்த வயதிலும் உழைப்பதை அறிந்தவனாக இருந்தான்.

நாளைக்குள்ள காலேஜ் பீஸ் கட்டலனா எக்ஸாம் அட்டர்ன் பண்ண முடியாதுப்பா என்று அருண் சொன்னபோது செல்வத்துக்கு தன் கனவுகள் கலைந்துவிடுமோ என்ற பயம் எத்தனிக்க அழுகையே வந்துவிடும்போல் இருந்தது. கடந்தபோன இருபது வருட உழைப்பு வீணாகி விடுமோ என்று, அதற்குள்ளாக கர்ணனாக தான் வெளிப்படும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்து வில்லிலிருந்து எய்தப்படும் அம்பு போல வெளிவந்தார். அந்த நேரம் கர்ண மகாராஜாவாகவே வெளிப்பட்டார். முகத்தில் செந்துரத்தினால் பூசப்பட்டு விளக்கு வெளிச்சத்தில் மினுமினுப்பாக தோன்றினார். கம்பீரக் குரலில் நிஜ கர்ணனே தோற்கும்வண்ணம் வெளிப்பட்டார் செல்வகணபதி.

"அஞ்சை பஞ்சைகள்  பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன்
அஞ்சை பஞ்சைகள் பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன்
பறந்தோட தானம் செய்தேன்
பறந்தோட தானம் செய்தேன்
பாருங்கோ கீர்த்தி வடைத்தேன் 
தன கர்ணன் என்று"
என்ற பாடல் வரிகளால் தன் கதாபாத்திரத்தை வெளிப்படுத்திய செல்வகணபதிக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, நாளை முதல் தன் மகன் அருண் காலேஜ்ஜில் படிக்க முடியாது போகுமே என்பது. இரவுகள் விடியல்களை நோக்கி நகருவதாய்தான் இந்த 58 வயதிலும் எண்ணுயிருந்தார் செல்வகணபதி.